சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொழியான சசிகலா அவரது குடும்பத்தினர் பெயரில் அதிகளவில் சொத்துக்கள் குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையாக வைத்து பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிகலாவிற்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சசிகலா தொடர்புடைய 1600 கோடி மதிப்புடைய சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 300 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டது. அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான 2,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என 100 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில் சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் 15 கோடி ரூபாய் மதிப்பில், 3,486 சதுர அடி நிலத்தில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அதனடிப்படையில் அந்த 15 கோடி மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கி, அதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீஸில் சொத்து முடக்கம் செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அச்சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு பெயர்மாற்றம் செய்யவோ தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!