மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு

 

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்டறியும் பொருட்டு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே உள்ள உயர்மட்ட குழுவை மறுசீரமைப்பு செய்து கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் தலைவராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய செயலர் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழு அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டு வழங்கப்படுவதை கண்காணிக்கும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் முறையாக நிரப்பப்படுகிறதா என்பதையும், பணிபுரிய உகந்த பணியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்யப்படுவதையும் இக்குழு கண்காணிக்கும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!