ஆந்திர அரசியலில் கிளம்பிய புயல்: நடிகை ரோஜா ஆபாச படம் விவகாரம் – என்ன நடந்தது

பிரபல நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜாவின் வீடியோ ஒன்று ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் சித்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. இவர் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு குறித்து பேசியுள்ள அந்த வீடியோவில், ”சட்டசபையில் இதைவிட என்னை மோசமாக நீங்கள் நடத்தினீர்கள். இப்போது அதே விஷயம் உங்களுக்கு நடக்கும் போது கண்ணீர் விடுகிறீர்கள். இப்போதுதான் வலிக்கிறதா”என்று கேட்கிறார். மேலும், ”இதுதான் விதி. அது உங்களை சும்மா விடவே விடாது. மீண்டும் உங்களை தாக்கும். சட்டசபையில் அன்றைக்கு ஒரு சிடியை எடுத்து வந்து, இது ப்ளூ ஃபிலிம் ரோஜா நடித்த படம் என்று சொன்னீர்களே ஞாபகமிருக்கிறதா? அப்போது உங்களுக்கு அது அநாகரிகமாக தெரியவில்லையா? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? உங்கள் வீட்டில் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்களா? உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா? எனக்கு குடும்பம் இல்லையா ? எனக்கு குழந்தைகள் இல்லை? இப்போது தான் எனக்கு ஹேப்பியாக இருக்கிறது.

நீங்கள் அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தீர்கள். இப்போது பேசுங்கள். உங்கள் பேச்சுக்களால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன். இன்றைக்கு தானே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இனிமேல் நீங்கள் சட்டசபைக்கு வரவே முடியாது. கடவுள் உங்களை சட்டசபைக்குள் அனுமதிக்கவே மாட்டார்” என்று பேசியிருக்கிறார்.

ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பதி ராம்பாபு எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து சில அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அதன் பின்னர் கண்ணீர் வடித்தபடியே, என் மனைவி நான் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவது தவிர அவர் எந்த காலத்திலும் அரசியலுக்குள் வந்ததில்லை. இதுவரை அவர் என்னை அவமானப்படுத்தியது இல்லை. ஆனால் என்னால் அவர் அவமானப்பட்டு விட்டார். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது போல நான் வருத்தப்பட்டது கிடையாது. நான் இனிமேல் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன். நான் மீண்டும் முதல்வரான பின்னர்தான் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைப்பேன் என்று பேசியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் இந்த கண்ணீர் பேச்சுக்குத்தான் ரோஜா அப்படி ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருக்கிறார். ரோஜாவின் இந்த வீடியோவால், சந்திரபாபு நாயுடு அன்றைக்கு நடந்துகொண்ட விதம் குறித்தும் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

Translate »
error: Content is protected !!