உத்தரபிரதேசத்தில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் 3 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. ஆகையால், அவர்கள் வீட்டில் விசாரித்தபோது, அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று முதல் புதன்கிழமை வரையிலான 3 நாட்களுக்கு அந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. எனினும் வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையில் நடைபெறும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் விடுமுறைக்கு பின்னர் பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும் என்று  பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தான் காசியாபாத்திலுள்ள இன்னொரு பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க முடிவெடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

 

 

Translate »
error: Content is protected !!