மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம் … துணை மேயர் தகவல்

சென்னை சைதாப்பேட்டை அரசு பண்ணையில் தமிழ்நாடு அரசின் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதியில் இருந்து 2.19 கோடி மதிப்பில் 1 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை தொகுதியில் அரசு பண்ணை முதல் மற்றும் இரண்டாம் தெருக்களில் 2.19 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

மழைகாலத்தில் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் பணிகளை வரும் மழைக்காலத்திற்குள் செப்டம்பர் இறுதிக்குள் விரைந்து முடிக்க திட்டமிட்டு ஒப்பந்ததாரர்களிடம் அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த மழை காலத்தில் சென்னை தண்ணீரில் தத்தளிப்பதை நேரில் கண்டு, அதன் விளைவாக இந்த மழைகாலத்தில் பாதிப்புகள் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நானும், மேயரும், மாநகராட்சி அதிகாரிகளுடன் தினசரி ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றும், மெட்ரோ குடிநீர் இணைப்பு பணிகள் நடந்து வருவதாகவும் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய துணை மேயர், கால்வாய்களில் நேரடியாக கழிவுநீர் கலப்பது குறித்து தொடர்பாகவும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், எந்த பகுதியில் கழிவுநீர் கலந்தால் தெரிவியுங்கள், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும், மண்டலத்தின் அடிப்படை கட்டமைப்பு பணிகளும் மண்டல கூட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!