யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 

ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியே சொன்னதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை எனவும், யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதுபற்றி தான் பேசவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒற்றை தலைமை விவகாரத்தை பொறுத்தவரை கட்சியில் உள்ள தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரின் மத்தியிலும் தற்போதைய சூழலில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது எனவும், அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் காரணமாகவே அதனை வெளியே தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என மட்டுமே தான் அதை வெளியே கூறியதாகவும், மாறாக அதில் எந்தவொரு உள் நோக்கமும் இல்லை எனவும் ஜெயகுமார் தெரிவித்தார். அதேபோல ஒற்றை தலைமை வேண்டும் என மட்டுமே தான் கூறி இருந்ததாகவும், யார் அந்த ஒற்றை தலைமை என்பதைப்பற்றி தான் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஓ.பி.எஸ்-ஐ சசிகலாவைப்போல் ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் கட்சிக்கு இல்லை என்ற அவர், சசிகலாவிற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை ஆனால் ஓ.பி.எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்த அவர், தற்போதைய சூழலில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுமூகமான தீர்வு எட்டப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் சிறையில் இருந்து வெளியே வந்த பின் இருவரும் தன் வீட்டிற்கு வந்ததாக கூறிய அவர், அதேபோல இன்றும் தன் வீட்டிற்கு இருவரும் வந்தால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்காத காரணத்தினால் தான் பேசுவதாக கூறும் கருத்துக்கள் பொய்யானது எனவும், பதவிக்காக தான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை எனவும் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!