ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெறும்

ஒற்றை தலைமை தீர்மானம் ஜூலை 11ம் தேதி நடைப்பெற உள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றும், செம்மையாக ஒற்றுமையாக செயல்பட்டு ஆட்சி அமைப்போம் எனவும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், 42 ஆண்டுகள் எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும், 62 ஆண்டுகள் பொது சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகவும்,அதிமுகவை நல்ல முறையில், ஒருங்கிணைத்து கொண்டு செல்வேன் என்றும், தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் ஒற்றை தலைமையை தான் விரும்பிகிறார்கள் எனவும் கூறினார்.

மேலும், எடப்பாடி தான் ஒற்றை தலைமையாக வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள் என கூறிய அவர்,ஜூலை 11ம் தேதி அந்த நல்ல செய்தியை அனைவரும் கேட்க போகிறார்கள் என்றும், மீண்டும் அதிமுக ஆட்சியை சென் ஜார்ஜ் கோட்டையில் அமைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் எனவும், செம்மையாக, ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , அதிமுக அடிமட்ட தொண்டன் கூட உயர் பதவிக்கு வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் அவைத்தலைவர் என்றும், பொதுக்குழுவால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும்,தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

சட்ட திருத்ததின் படி தான் அனைத்தும் நடைப்பெற்றதாக கூறிய அவர்,யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுகவிற்கு இல்லை என்றும்,அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழு தான் எனவும்,ஜூலை 11ம் தேதி கட்டாயம் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளிக்காமல், நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடுவதால் ஓ.பி.எஸ்க்கு மன உளைச்சல் அல்ல, தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல் என விமர்சனம் செய்தார்.

ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியது குறித்த கேள்விக்கு, வன்முறை வன்முறைக்கு தீர்வாகாது என்றும்,அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்கள் கூச்சலிட வேண்டாம் என கூறியதாகவும் தெரிவித்தார். ஒற்றை தலைமை விவகாரத்தில் பா.ஜ.க தலையீடு இல்லை என கூறிய அவர்,எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும் ஒருபோதும் அதிமுக ஏற்காது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

முதலமைச்சர் 7 ஜன்மம் எடுத்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என குறிப்பிட்ட அவர், அதிமுகவை அழிக்க ஒருவர் பிறக்கவே மாட்டார் என்றும், முதலமைச்சர் மு.க.அழகிரியை மனதில் வைத்தே அழிக்க நினைத்தால் அழிந்துவிடுவார்கள் என தெரிவித்ததாகவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!