நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிய போலீசார் – அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது உள்ளே நுழைந்த போலீசார் ஒருவர் நீதிபதியை சராமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மதுபானியின் ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வில் நீதிபதி அவினாஷ்குமார் ஒரு வழக்கு குறித்து விசாரணை நடத்தி கொண்டு இருந்தார். அப்போது நீதி மன்றத்திற்குள் புகுந்த 2 போலீஸ் அதிகாரிகள் நீதிபதியை தாக்கி உள்ளனர். உடனடியாக அங்கு இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியை அவர்கள் தாக்குதலில் இருந்து காப்பாற்றினர். நீதிபதி பாதுகாப்பாக இருக்கிறார் ஆனால் திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ளார். நீதிபதியை தாக்கிய அதிகாரிகள் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி கோபால் பிரசாத் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அபிமன்யு குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

நீதிபதி மீதான தாக்குதலுக்கு ஜாஞ்சர்பூரின் வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்லது. இது நீதித்துறை மீதான தாக்குதல் என்று கூறி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வழக்கறிஞர் சங்கம் எச்சரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!