முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு தள்ளுபடி

 

திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடீயோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வழக்கில் போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால் 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்து கொண்டு விசாரித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!