மத்திய, மாநில அரசுகளுக்கும் வரி செலுத்திதான் ஆக வேண்டும்- ஹைகோர்ட்

அகில இந்திய அளவில் இயக்க  அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் நுழையும் போது சுற்றுலா பேருந்துகள் தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நாகலாந்து மற்றும் புதுவையில் பதிவு செய்துள்ள தங்கள் பேருந்துகளை   புதுவையில் இருந்து கோவைக்கு இயக்கிய போது கடலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சட்ட விரோதமாக பேருந்தை மடக்கி நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய அளவில் அனுமதி பெற்றுள்ளதால், தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் வாகனத்தை இயக்க தனியாக  வரி செலுத்த அவசியமில்லை  என்றும், தமிழகத்திற்கு  தனியாக வரி செலுத்தினால் அது இரட்டை வரி செலுத்துவது போல் ஆகிவிடும் என மனுதாரர்கள் தரப்பில்  வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின் படி வெளி மாநில பேருந்தாக இருந்தாலும், தமிழகத்திற்குள் நுழையும் போது வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளின் படி, மாநில அரசுகள் வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு எடுத்து கொள்ளவில்லை என்பதால் மாநில அரசுக்கு வரி செலுத்தி தான் ஆக வேண்டும் என உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தார்.

 

Translate »
error: Content is protected !!