கொட நாடு கொலை வழக்கு: தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி உள்ளேன்-ஆறுகுட்டி விளக்கம்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற 5 மணி சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து, அங்கிருந்த பொருட்களை கும்பல் ஒன்று திருடிசென்றது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கனகராஜ் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து விசாரிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட எஸ்பி அஸ்ரா தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் முக்கிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சியின் இயக்குனர்களில் ஒருவரான விவேக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அழைத்து விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆறுகுட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கனகராஜ் ஜெயலலிதாவிடம் ஓட்டுனராக பணியாற்றிய போது அவரது நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறிது காலம் கனகராஜ், ஆறுகுட்டியிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் விபத்தில் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவும் ஆறுகுட்டியுடன் கனகராஜ் போனில் பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். 11:30 மணி அளவில் தொடங்கிய இந்த விசாரணையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் நீலகிரி மாவட்ட எஸ்பி அஸ்ரா உட்பட முக்கிய காவல்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வெளியே வந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒன்றரை மாதம் கனகராஜ் தன்னிடம் பணி புரிந்த நிலையில் தன்னை விசாரணைக்கு அழைத்ததாகவும் தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சொல்லி இருப்பதாகவும், கனகராஜ் தன்னிடம் டிரைவராக வேலை பார்த்தது உண்மைதான் எனவும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். விசாரணை சரியாக நடைபெற்றது எனவும் கனகராஜ் தன்னிடமிருந்து வேலையை விட்டு சென்றவுடன் அவருடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை என ஆறுகுட்டி தெரிவித்தார். விசாரணையின் போது, அவரது மகளும் மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, ஆறுக்குட்டியின் மகன்கள் ஆகியோர் அவரை சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

Translate »
error: Content is protected !!