சீமான் நாக்கை அறுத்துவிடுவேன்: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்

காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டிடுவோம் என்று கடுமையாக எச்சரித்த திரவியம் மீது நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அக்கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ்காரர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் தலைமையில் கோபண்ணா உள்ளிட்டோர் டி.ஜி.பி.யிடம் சீமானை கைது செய்யக் கோரி புகார் அளித்தனர்.

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் முன்னிலையில் பேசிய சாட்டை துரைமுருகன், ‘நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர்கள், நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும்.

பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமில்லை. உங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்குமில்லை. அவ்வளவு தான்’ என்று என்று பேசினார்.

இதனை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார், மேலும் சீமானையும் கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் பேசிய வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம், காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டி விடுவேன், நாக்கை அறுத்துவிடுவேன், தலையில்லா முண்டம் என கடுமையாக எச்சரித்து பேசினார்.

அதோடு, சீமான், சாதி ரீதியாக ஊருக்கு ஊர் ஒரு மாதிரி பேசுவதாகவும் திரவியம் கடுமையாக சாடினார்.

இதனையடுத்து திரவியம் மீது நாம் தமிழர் கட்சி சார்பில் வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளர் வெற்றி தமிழன் மற்றும் ஆர்கே நகர் தொகுதி செயலாளர் ஆனந்த் பாபு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர், இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!