“தன்வினை தன்னைச் சுடும்” என்ற பழமொழி பாஜகவுக்கு பொருந்தும்…!

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்வாரே. “அவரவர் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாக இருக்கிறது..” என்று. கிட்டத்தட்ட பாஜக எடுத்த சில முடிவுகள் அப்படித்தான் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி போய்விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதுமட்டுமல்லாது ஏற்கனவே பாஜகவுக்கு இருந்த செல்வாக்கும் இந்த தேர்தலில் குறைய இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக மாறிவிட்டன என்று அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். ஆமாம்.. கடந்த லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. மம்தா பானர்ஜி மட்டுமல்லாது பாஜக தலைவர்களே இத்தனை பெரிய வெற்றியை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு தான் தாமதம் கியரை மாற்றியது பாஜக. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது அடியோடு வீழ்த்தி மேற்குவங்க மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று இரவும் பகலும் யோசித்து வேலைகளை ஆரம்பித்தது பாஜக தலைமை.

மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான பல முக்கிய தலைவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் சுவேந்து அதிகாரி. அவர் மம்தா பானர்ஜி உடன் மிக நீண்டகாலம் திரிணாமுல் காங்கிரசில் பயணித்தவர். மம்தா பானர்ஜியின் வலதுகரம் போல செயல்பட்டவர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ஒரு எம்பி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அமித்ஷா முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் சேர்ந்தனர். இது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய பேரிடியாக பார்க்கப்பட்டது.

பாஜக தலைமை மிகப்பெரிய அரசியல் வியூகத்தை மேற்கு வங்க மாநிலத்தில் கையில் எடுத்துள்ளது என்று அந்த கட்சி ஆதரவாளர்கள் புகழ்ந்துரைத்தனர். இனி, மம்தா பானர்ஜி அவ்வளவுதான். அவரது அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியம் என்று வர்ணித்தவர் உண்டு. ஆனால் மம்தா பானர்ஜி எந்த ஒரு இக்கட்டான நிலைமையையும் சமாளிக்கும் வகையில் முன்பைவிட ஆவேசம் கொண்டவராக மாறியுள்ளார் என்கிறார்கள் மேற்குவங்க அரசியலை நன்கு அறிந்தவர்கள்.

எந்த நந்திகிராம் தொகுதியில் தனது மாஜி வலது கரமான சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறாரோ, அதே தொகுதியில், வான்டடாக போய் போட்டியிடுகிறார் மம்தா பானர்ஜி. இதன்மூலம்எனது நம்பிக்கைக்கு துரோகம் செய்தவர்களை பார்த்து நான் முடங்கிப் போகவில்லை. அவர்கள் கோட்டைக்கு உள்ளே சென்று கொடி நாட்ட நான் தயங்க மாட்டேன்.” என்று, வங்க புலி போல உறுமியுள்ளார் மம்தா பானர்ஜி.

இது ஒரு பக்கம் என்றால், கட்சி மாதிரி வந்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்து, ஏற்கனவே உள்ள பாஜக நிர்வாகிகளின் கோபத்தை வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறது பாஜக தலைமை. புதிதாக வந்தவர்களுக்கு சீட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று கூறி பாஜக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி அது பெரும் கலவரமாக மாறும் அளவுக்கு போய்விட்டது நிலவரம். எதிராளிக்கு வைத்த ஆப்பு தங்களையே குத்துகிறது என்று கையை பிசைகிறது பாஜக.

ஹூக்ஹ்லி மாவட்டத்தில் தாரகேஸ்வர், ஹவுராவில் அம்தா மற்றும் டோம்ஜூர், குல்பி, அலிபூர்தார் உட்பட மாநிலத்தின் பல வடக்கு பகுதிகளில் பாஜகவினர் திங்கள்கிழமை முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனெனில், இங்கெல்லாம் பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது, இது, பாஜக கட்சி தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் 89 வயதான ரவீந்திரநாத் பட்டாச்சார்யா. இவர், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியராகும். மம்தா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். அவர் ரொம்பவே நம்பியவர். ஆனால் இவரும் சீட் கிடைக்கவில்லை என பாஜகவில் சேர்ந்தார். உடனே சீட் கொடுத்தனர். எனவே, பாஜகவினர், சிங்கூரில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, கட்சி தொண்டர்கள் அமைதி காக்குமாறு, பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போராட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் தூண்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆக மொத்தம், வான்டடாக போய் வம்பில் மாட்டியுள்ளது பாஜக.

 

Translate »
error: Content is protected !!