9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு 2 ஜி.பி டேட்டா கார்டு

சென்னை

இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் என ஆக மொத்தம், 9.69 இலட்சம் மாணவர்களுக்கு, நான்கு மாதங்களுக்கு, நாளொன்றிற்கு 2 ஜி.பி.

விலையில்லா தரவு சிம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கவர்னர் சட்டசபையில் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டின் மனித வளத்தை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இளைஞர்களின் திறனை முழுமையாக மேம்படுத்த வேண்டும். எனவே, நம் மாநிலத்தில் முன்னுரிமை பெற்ற முதலீடாக கல்வி தொடர்ந்து விளங்கி வருகிறது.

2017 -18 ஆம் ஆண்டிலிருந்து, 19 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 5 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் கூடுதலாகத் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தொடர்ந்து, இடைவிடாமல், கல்வி கற்பதை உறுதி செய்வதே, நடப்புக் கல்வியாண்டின் சவாலாகும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட சலுகைகள் இப்பெருந்தொற்றுக் காலத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வாயிலாக, மாணவர்கள் பாடங்களை கற்கும் வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

விலையில்லா மடிக்கணினிகள் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மடிக்கணினியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்கள் வாயிலாகவும், பல்வேறு இணையதளங்கள் வாயிலாகவும், மின்னணு தொகுப்பில் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கான இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!