முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழக அமைப்புச்செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக்கழகசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத்தேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது.
அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில் நேற்று தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல் துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம், இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிவிடவோ முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை.
எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும் அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.