அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை & சிகிச்சை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கண் விழித்திரை அறுவை சிகிச்சை மீதான விழிப்புணர்வு, சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல் குறித்து சர்வதேச கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற “ரெட்டிகான்” கருத்தரங்கு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அகர்வால் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், செயல் இயக்குநர் அஸ்வின் அகர்வால் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கண் அறுவை சிகிச்சைகள் மீதான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அரசுப்பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடைக் கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாகவும், கண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதியவர்களுக்கு அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று இலவசமாக கண் மருத்துவ முகாம்கள் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், கொரோனாவுக்கு பின் கண்களில் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 100% உயர்ந்துள்ளதாகவும், சத்தான காய்கறிகள், உடற்பயிற்சி, உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் கண்களில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றும், அனைவரும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!