வேதா நிலையத்தின் சாவியைத் தாருங்கள் – மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு கொடுத்துள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வேதா நிலையம் என்ற வீட்டில்தான் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, இந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017ம் ஆண்டு அப்போது இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் தொடர்ந்த இந்த வழக்கில், கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், 3 வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு கொடுத்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர், அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்துவிட்டு, இது தொடர்பாக முடிவெடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

Translate »
error: Content is protected !!