கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை – கேரள அரசு

கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து கேரள அரசு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில்,

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களில் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி புனிதமான ‘தை’ தமிழ் மாதத்தின் முதல் நாள்; ஆனால் 2022-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14-ந்தேதியை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என்று அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 15ம் தேதி விடுமுறையை மாற்றி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 14) கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!