வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டம்சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று 3-வது நாளாக விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை 3 நாட்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன்படி, முதல் நாளான 14-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் 150 பேரை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று  ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, 3-வது நாளான இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ சூரியன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் அதிகாரம், சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்டவற்றை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!