அதிமுக – பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன்

துரோகம் இழைத்து வரும் பாஜகவுக்கும்,அதனுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில், அரசு விழா என்று கூட பாராமல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள். தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி செயல்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியைத் தர மறுப்பது; தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது எனத் தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.

எனினும் இதை பற்றி பொருட்படுத்தாமல் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவித்ததில் இருந்தே, அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதிமுகவை பாஜகவுக்கு சரணடைய வைத்திருக்கும் இந்த துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழக மக்கள் இந்தத் துரோகச் செயலுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!