அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை வெளியிட தகவல்

சென்னை,

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5-ந் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பின்னர், கடந்த 7-ந் தேதி ஆஸ்பத்திரியில் அமைச்சர் காமராஜூவுக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ஓரிரு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையையும் கொண்டாடினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து மியாட் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கும் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர்.

அதற்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு அவருடைய உடல்நிலை குறித்த எம்.ஜி.எம். மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 19-ந் தேதி இரவு அமைச்சர் ஆர்.காமராஜ் வென்டிலேட்டர் உதவியுடன் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை அனுமதித்து சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், கொரோனாவால் நுரையீரல் செயல்பாடுகளில் மாற்றம் அதிகமாக இருக்கிறது. அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு, சிகிச்சை நடைமுறைகள் சரியான அளவில் நடைபெற்றன. அவருடைய உடல்நிலை இப்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நாடித்துடிப்பு போன்ற அனைத்து உறுப்பு செயல்பாடுகளும் நிலையாக உள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!