அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே அட்மிஷன் தொடங்க வேண்டும் – மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது.

அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே பதினோராம் வகுப்பு அட்மிஷன் தொடங்க வேண்டும். அறிவிப்பை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்த, தெளிவான வழிகாட்டுதல், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி அளவில் பொதுத்தேர்வு எழுதலாம் என அண்மையில், சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால், இது உண்மையல்ல என, கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

எனவே, பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடுவது, பிளஸ் 1 சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை பற்றிய, எந்த அறிவிப்பும் இல்லை. அட்மிஷன் கேட்டு வருபவர்களுக்கு, இவர்களிடம் பதில் இல்லை.

ஆனால், பல தனியார் பள்ளிகள், தங்களிடம் படித்த மாணவர்களுக்கே, பிளஸ் 1 அட்மிஷன் தர மறுப்பதாகவும், உடனே பணம் செலுத்தினால் மட்டுமே, பாடப்பிரிவுகள் வழங்க முடியும் எனவும், பெற்றோருக்கு நெருக்கடி தருவதாக, புகார் எழுந்துள்ளது. கோவை மட்டுமல்லாமல், மாநிலம் முழுக்க, இதே நிலையே உள்ளது.

கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவும் தற்போதைய சூழலில், வருமானம் குறைந்து வருவதால் பெற்றோர் செய்வதறியாது தவிக்கின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ”கல்வித்துறையின் உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. பிளஸ் 1 சேர்க்கை தற்போது நடத்தக் கூடாது. இதுகுறித்து, சுற்றறிக்கை வாயிலாக, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்.” என்றார். மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டபோது, ”இது தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Translate »
error: Content is protected !!