ஆக்சிஜன் இருந்தால் உதவுங்கள்… மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள்..!

ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது.

இந்நிலையில், ஆக்சிஜன் கையிருப்பு அதிக அளவில் உள்ள மாநிலங்கள் டெல்லிக்கு உதவுமாறு அனைத்து மாநில முதல்மந்திரிகளுக்கும் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் மூலம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட உருக்கமான பதிவில், ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருந்தால் டெல்லிக்கு தந்து உதவும்படி அனைத்து மாநில முதல்மந்திரிகளுக்கும் கடிதம் எழுதுகிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவி வரும் போதும் கொரோனாவின் தீவிரத்தால் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!