கோரோனோவால் யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு….உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யூபிஎஸ்சி தேர்வு நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பலர் தேர்வு எழுத வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கொரோனா நோயாளிகளாகவும், கொரோனா நோய் குறித்த அச்சுறுத்தல் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதாலும் தேர்வு எழுத முடியவில்லை.

இதையடுத்து, யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி தேர்வை எழுதத் தவறவிட்ட மாணவர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்த வாதத்தில், “தேர்வு எழுதத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வயதில் சலுகையும், மீண்டும் ஒரு வாய்ப்பும் வழங்கிட வேண்டும்எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், “யூபிஎஸ்சி தேர்வு எழுதும் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவது குறித்து அரசு பரீசிலித்து வருகிறதுஎனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி .எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் கடந்த மாதம் 22-ம் தேதி காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார்.

அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், “யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதைத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை.” எனத் தெரிவித்திருந்தார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!