பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீ வைப்பு..! – வைகோ கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியில், நேற்று நள்ளிரவு ஒரு நாசகார கும்பல் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு நெருப்பு வைத்திருக்கிறது. அண்ணாவின் சிலை மீது மூடப்பட்டிருந்த துணி எரிந்து, சிலை கருகி இருக்கிறது.

இந்த இழிவான செயலில் ஈடுபட்ட காவிக்கும்பலைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளை அவமதிக்கும் போக்கு தொடர்வதற்கு சனாதனக் கும்பல்களின் தூண்டுதலே காரணமாகும்.

அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில், நச்சு விதைகளைத் தூவி, தேர்தலில் அறுவடை பெற்றுவிடலாம் என்ற மதவாத சனாதனக் கூட்டத்தின் முயற்சி தவிடுபொடி ஆகும். உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை மாநகருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்.

நம் தாயகத்திற்கு, ‘தமிழ்நாடுஎன பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா சிலைக்குத் தீ வைத்த கூட்டம்தான், ‘தக்ஷிணப்பிரதேசம்என பெயரை மாற்றுவோம் என்று கொக்கரிக்கிறது. இத்தகைய நாசகார கூட்டத்திற்கு துணை நிற்பவர்களையும் தமிழக மக்கள் முற்றாகத் துடைத்து எறிவார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதைக் காட்டும்.

Translate »
error: Content is protected !!