நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாள் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும், எனவே, நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!