தமிழகத்திற்கு பாஜக அரசு செய்தது என்ன? அமித்ஷாவுக்கு டி.ஆர். பாலு கேள்வி

மத்தியில் உள்ள பாஜக அரசு, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு என்ன செய்தது என்று, டி.ஆர். பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகத்திற்கு வந்தார்; இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சென்னையில், தமிழக அரசு சார்பில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை, அவர் துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் அமித்ஷா, ஊழல் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார். குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

இந்நிலையில் அமித்ஷாவின் கேள்விக்கு பதிலளித்து, திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக இருந்த காலத்தில் தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளின் 72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்த காலத்தில் தான் என்று குறிப்பிட்டுள்ள டி.ஆர். பாலு, சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த பெருமை திமுக தான் உள்ளது என்றார்.

மத்திய பாஜக அரசு-அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம், இந்தித் திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட துரோகங்களையே செய்ததாக விமர்சனம் செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!