தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொங்கல் விடுமுறைக்கு பிறகான சோதனை மூலம் கூடுதல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் நாள்தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் குறையாமல் பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் அவர் கூறினார். எனவே மக்கள் அனைவரும் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.