தொடர் மழையால் சம்பங்கி பூக்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம் ஆயுத பூஜை தினத்தன்று சம்பங்கி ஒரு கிலோ ரூ. 280க்கு விற்பனையான நிலையில், பண்டிகை சீசன் முடிவடைந்ததால் விலை குறைந்து கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாய தோட்டத்தில் பறிக்கப்பட்ட சம்பங்கி பூக்களை வாங்க ஆர்டர் இல்லாததால் வியாபாரிகள் முன் வரவில்லை. தொடர் மழை காரணமாக சம்பங்கி பூக்கள் விற்பனையாகாததால் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 டன் சம்பங்கி பூக்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் கீழே கொட்டினர். சம்பங்கி பூக்கள் விற்பனையாகாததால் சம்பங்கி பயிரிட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகினர். இப்பகுதியில் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுவதாகவும், எனவே தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சத்தியமங்கலம் பகுதியில் பூக்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!