முன்னாள் உதவி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை அபகரித்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு டி.ஜி.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் 3 காவலர்கள், ஆந்திரா தொழிலதிபர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 10-க்கும் மேற்பட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர தொழில் அதிபர் வெங்கட சிவநாககுமார், கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சௌகத் அலி, நந்தகுமார், சரவணகுமார் என மொத்தமாக ஐந்து பேரை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி நண்பருடைய வீட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த காவல் ஆய்வாளர் சரவணனையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றிருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் சிவக்குமார் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அது குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!