அரசை விட தனியாரிடமே அதிக தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அதிக அளவில் தனியாரிடம் உள்ளதா என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் எண்ணிக்கை 942 என்றும், ஆனால் தனியாரிடம் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 115 ஆக இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை 21 அரசு தொழிற்பயிற்சி மையங்களும், தனியாரிடம் 14 தொழிற்பயிற்சி மையங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.