சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு,   தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், 18.05.2021 முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து, செக்டார்களாக வகைப்டுத்தி 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து, ஒரு காவல் நிலைய சரகத்தில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்கு பொதுமக்கள் செல்ல பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று (22.5.2021) மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 2.410 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 856 இருசக்கர வாகனங்கள், 39 ஆட்டோக்கள், 8 இலகுரக வாகனங்கள் மற்றும் 4 இதர வாகனங்கள் என மொத்தம் 907 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் நேற்று (22.5.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 1,570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 2,373 இருசக்கர வாகனங்கள், 144 ஆட்டோக்கள், 22 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 2,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3,243 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 348 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 55 கடைகள் மூடப்பட்டு, ரூ.8,97,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுபொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!