ஒரே நாளில் 2 அறிவிப்புகள்….முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை,

தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட உள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் 7,700 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் அடுத்ததாக சம்பள உயர்வு அறிவித்து ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் மனதை குளிர்வித்துள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் 7,700 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை மூலம் தகவல் வெளியாகியுள்ளது. வருகை பதிவேட்டின்படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள உயர்வை பெறுவார்கள்.

முன்னதாக அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி, மத்திய அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இயதியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது.

எனினும், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், ஏழாவது ஊதியக்குழுவின் பரியதுரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர, சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று, 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீளப் பணியமர்த்தப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையாது, நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.

இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 30.1.2019 அன்று அறிவித்து, உடனடியாக பணிக்கு திரும்பினர்.

அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது.

அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்களும், ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் நன்றி கூறியுள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் மனதை குளிரச்செய்யும் வகையில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஒரே கல்லில் பல ஆயிரக்கணக்கான வாக்கு மாங்காய்களை அடித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

 

Translate »
error: Content is protected !!