சென்னை அருகே திருவான்மியூரில் 8 ஆயிரம் சதுரடி நில மோசடி…..மூன்று பேர் கைது

சென்னை, திருவான்மியூரில் 8 ஆயிரம் சதுரடி நிலத்தினை போலி வரிக சான்றிதழ் மூலம் நில அபகரிப்பு செய்த சகோதரர்கள் மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அடையாறு சாஸ்திரிநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். சென்னை, திருவான்மியூர், சிவகாமிபுரம் பகுதியில் இவருக்கு சொந்தமாக சுமார் 8,138 சதூரடி நிலம் உள்ளது. அதனை அவர் சென்னை சைதாப்பேட்டை, பத்திர பதிவு அலுவலக ஆவணம் மூலம் கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தின் வாயிலாக கிரையம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அந்த நிலத்தை மர்ம நபர்கள் கூட்டு சதி செய்து அந்த நிலத்தை அபகரித்துள்ளனர். நிலத்தின் பூர்வீக உரிமையாளரான கந்தசாமி கிராமனியின் வாரிசுதாரர் என திருபுரஅம்மாள் என்ற பெண்ணின் பெயரில், மயிலாப்பூர் வட்டாட்சியர் வழங்கியது போல் போலியான வாரிசு சான்றிதழை அந்த பெண்ணின் பெயரில் மோசடியாக உருவாக்கியுள்ளனர்.

அதன்மூலம் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது பெயருக்கு அவரது தாயாரிடமிருந்து செட்டில்மென்ட் பெற்று நிலத்தினை அபகரித்துள்ளார். அந்த மோசடி ஆவணத்தை கொண்டு அவரது சகோதரர் சந்திரசேகர் என்பவருக்கு மோசடியாக பவர் கொடுத்து வெங்கடேஷின் நிலத்தை அபகரித்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி  தடுப்புப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் மோசடி நடந்திருப்பது உண்மை என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன், அவரது சகோதரர் சந்திரசேகர் மற்றும் மோசடி ஆவணத்தில் சாட்சியாக கையொப்பமிட்ட யோகானந்தன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!