‘டிரோன்’ மூலம் டில்லி மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உஷார் நிலையில் ராணுவம்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமானப்படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 2 மர்ம டிரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்தின. 2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். அது கீழே விழுந்து வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். ராணுவ மையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை ஆகும். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகள் பல தடவை காஷ்மீர் பகுதிகளில் டிரோன்களை பறக்க விட்டபடி உள்ளனர். இதனால் டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே டில்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்டு 15-ம் தேதி டில்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும். அதில் பிரதமர் மோடி கொடி ஏற்றும் போது சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆகஸ்டு 5-ம் தேதி டில்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால் ஆகஸ்டு 15ம் தேதிக்கு முன்னதாகவே எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் இப்போதே முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டில்லியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Translate »
error: Content is protected !!