நடிகர் கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர்கள் கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மதியம் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அதில் பேசிய அவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீடு மற்றும் சரத்குமார் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள நடிகர் கமல் வீடு, கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்திய போது அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் எங்கிருந்து பேசினார் என்பது குறித்து சைபர்கிரைம் போலீசார் நடத்திய ஆய்வில் அவர் மரக்காணத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. மரக்காணம் போலீசாருக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்து அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!