நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு புரளி

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் போனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் மிரட்டல் வந்த முகவரி சூர்யாவின் அலுவலகம் இல்லை என்பதும், அது வெறும் புரளி எனவும் தெரியவந்தது.

இன்று மதியம் 12:30 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசிய மர்ம நபர் சென்னை, ஆழ்வார்பேட்டை, சீத்தாம்மாள் காலனியில் நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’’ என மிரட்டல் விடுத்து விட்டு போனை துண்டித்து விட்டார். அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசார் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேனாம்பேட்டை போலீசார் அங்கு சென்று உடனடியாக விசாரணை நடத்தினர். அப்போது அது நடிகர் சூர்யாவின் அலுவலகம் அல்ல என்பதும் அங்கு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கெஸ்ட் அவுஸ் இயங்கி வருவது தெரியவந்தது. நடிகர் சூர்யாவின் அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த முகவரியில் இருந்ததும், தற்போது அதனை காலி செய்து அடையாறு சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது.


வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனையில் அது வெறும்புரளி என தெரியவந்தது. அதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.நகர் காவல் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!