‘பிக்பாஸ்’ நடிகர் தர்ஷன் மீது அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் பேரில் பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்புலி, வால்டர் உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. மாடலிங் துறையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த நடிகர் தர்ஷனை காதலித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் தர்ஷன் பிரபலமானார். பின்னர் 2019 மே மாதம் தர்ஷனுக்கும், ஷனம் செட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 2019 ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது. இச்சூழ்நிலையில் ஷனம் செட்டிக்கும் தர்ஷனுக்கும் இடையே திடீர் விரிசல் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தர்ஷன், சனம் ஷெட்டியுடனான தொடர்பை துண்டித்தார்.

இதனால் திருமணம் செய்யாமல் மோசடி செய்ததாக தர்ஷன் மீது சனம்ஷெட்டி சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சனம் ஷெட்டி, தர்ஷன் மீது தான் அளித்துள்ள புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய கோர்ட் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பிக்பாஸ் தர்ஷன் மீது 294 (பி)- (ஆபாசமாக திட்டுதல்), 506 (1) கொலை -மிரட்டல், 420- (நம்பிக்கை மோசடி), 354- (பெண்ணை மானபங்கப்படுத்துதல்) என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!