மலை சரிவில் விழுந்து ஒரு வயது பெண் குட்டியானை உயிரிழப்பு

வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் உயிரிழந்தது

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வால்பாறை அக்காமலை பில் மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

அருகில் சென்று பார்த்ததில் குட்டி யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் தலைமையில் வால்பாறை சரகர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தன்னார்வலர் கணேஷ் மற்றும் வனவர் முனியாண்டி கீர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மலை சரிவில் இருந்து விழுந்ததில் குட்டியானை இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர். இறந்த பெண் யானைக்குட்டிக்கு ஒரு வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து குட்டி யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து வனவிலங்குகள் உண்பதற்காக உடல் விடப்பட்டது. வால்பாறை பகுதியில் மூன்று தினங்களில் இரண்டு யானைகள் இறந்து இருப்பது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!