சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக்….கதறிய இளைஞர்!

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, ஆயிரம் விளக்கு, குலாம் அப்பாஸ் அலிகான் தெருவைச் சேர்ந்தவர் ஐசக் (வயது 23). நேற்று மதியம் 1.30 மணியளவில் இவர் தனது டியூக் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு கோடம்பாக்கம் நோக்கி சென்றார்.

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அவர் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் பைக் தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது. இதனால் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்று மயிரிழையில் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு அதிகாரி வீரபாண்டியன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர். பைக் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பைக் எரிந்த போது அதில் வந்த வாலிபர் ஐசக் தனது பைக் எரிவதைப்பார்த்து கதறியழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!