உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து விற்க முயன்ற 24 பேர் கைது..!

சென்னை பெருநகர காவல் தெற்கு, கிழக்கு மற்றும்  வடக்கு மண்டலங்களில் உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்க முயன்ற 24 நபர்கள் கைது. 243  ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல்.

கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர்/நினவீர் மருந்தானது கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சென்றடைய உரிய பரிந்துரை ஆவணங்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்துகளை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் மருத்துவர். என்.கண்ணன், மற்றும் செந்தில்குமார், ஆகியோரின் மேற்பார்வையில், நான்கு மண்டல இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பிலும், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கொண்ட காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தை  சட்ட விரோதமாக பதுக்கி வைத்தவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கண்காணிப்பு துரிதபடுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வழங்கப்பட்ட உத்தரவின்பேரில், தனிப்படையினர் தேடுதலில் 24 நபர்கள் அடையாளம் காணப்பட்டு, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கீழ்பாக்கம் மாவட்டத்தில் 3 வழக்குகளும், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் 1 வழக்கும், அடையாறு காவல் மாவட்டத்தில் 1 வழக்கும், புனித தோமையர்மலை மாவட்டத்தில் 3 வழக்குகளும், மாதவரம் காவல் மாவட்டத்தில் 1 வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட 24 நபர்களிடமிருந்து 243 ரெம்டெசிவர்/நினவீர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கைப்பற்றப்பட்ட ரெம்டெசிவர் நினவீர் மருந்து பாட்டில்களில் 78 மருந்து பாட்டில்கள் மீள நோயாளிகள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 165 மருந்து பாட்டில்கள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு பெற்று வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உயர் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர்/நினவீர்  மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!