அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதல்வரிடம் பேசப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை, நடப்பாண்டு 15 சதவீதம் ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் எனவும், அரசு உதவிப்பெறும் கல்லூரிகளிலும் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி, ஏற்கனவே, இந்த ஆண்டு மட்டும் 21 கல்லூரிகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முறையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் ஏற்கனவே 10 சதவீதம் இருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கையை 15 சதவீதமாக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!