இந்தியாவில் அதிக அளவில் போலியான ரேஷன் அட்டை வைத்திருந்த மாநில பட்டியலில் உ.பி முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஒரு நபர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்து உள்ளதா? என்றும் அப்படி என்றால் ரேஷன் அட்டையை வழங்கிய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய நுகர்வோர்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே,மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் போலியான மற்றும் தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களை கண்டறிய அவ்வபோது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கணக்கை நீக்கி வருவதாகவும் 2014-2021 வரை இந்தியாவில் தகுதியற்ற 4,28,01,585 ரேஷன் அட்டை கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 1,70,75,301 தகுதியற்ற ரேஷன் அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 2014-2021 இடைப்பட்ட காலங்களில் 3,04,140 தகுதியற்ற ரேஷன் அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.