உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்று வாங்கிய மனைவி

உயிரோடு இருக்கும் தன்னை இறந்ததாக சான்று பெற்று, வாரிசு சான்றும் பெற்று சொத்து விற்பனை செய்த முன்னாள் மனைவி மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் கணவர் சந்திரசேகர் 42, புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனுார் கலாமந்திரம் தெருவை சேர்ந்தவர் அ.சந்திரசேகர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:நான் கண்டனுாரில் மளிகை கடை நடத்தி வருகிறேன். கலாமந்திரம் தெருவில் எனது பெற்றோருடன் வசிக்கிறேன். எனக்கும் காரைக்குடியை சேர்ந்த மணிராஜ் என்பவரின் மூத்த மகள் நதியா ஸ்ரீ 36, என்பவருக்கும் 2005 செப்., 8 ல் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

மனகசப்பு காரணமாக 2018ல் விவாகரத்து பெற்று விட்டோம்.மாத்துார் ரோட்டில் எனக்கு 11.25 சென்ட் காலிமனை இருந்தது. இதனை விற்பனை செய்ய முயற்சித்த போது ஏற்கனவே காரைக்குடியை சேர்ந்த கலைக்கோவன் என்பவருக்கு 2022 மார்ச் 30 ல் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.இது குறித்து காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த போது நான் 2015 நவ., 24 ல் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழை காரைக்குடி நகராட்சியில் எனது முன்னாள் மனைவி நதியா ஸ்ரீ பெற்றுள்ளார்.

அதனடிப்படையில் தன்னை வாரிசாகவும், குழந்தைகள் மைனர் என காண்பித்து சான்றிதழ் பெற்று சொத்தை விற்பனை செய்துள்ளார்.சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்ததின் பெயரில் 2022 ஏப்., 18 ல் விற்பனை பத்திரம் ரத்து செய்யப்பட்டது. உயிரோடு இருக்கும் என்னை இறந்ததாக சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்கிய நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர், பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் கூறியது: இந்த முறைகேடு குறித்து ஏற்கனவே எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அதில் நடவடிக்கை இல்லாததால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன், என்றார்.

Translate »
error: Content is protected !!