ஆன் லைன் கடன் ஆபாச மிரட்டல்..! இளைஞர் தற்கொலை

மதுராந்தகம் அருகே தந்தையின் மருத்துவ செலவிற்காக ஆன்லைன் மூலமாக 4 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றவர் குறித்து, அவரது நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி மிரட்டியதால், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது .

 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழையனூர் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் ரங்கனாதன். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விவேக், ஒரு மாதத்திற்கு முன்பாக தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக, கெட்ரூபி டாட் காம் என்ற ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனத்தில் 4 ஆயிரம் ரூபாயை வார வட்டிக்கு கடனாகப் பெற்றுள்ளார்.

 கடனுக்குப் பிணையாக அவரது செல்போனைக் கண்காணிக்கும் அனுமதியை கடன் நிறுவனத்தினர் செய்து வந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு வட்டியுடன் சேர்த்து 4 ஆயிரத்து 300 ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், விவேக்கிற்கு வர வேண்டிய பணம் வராததால் கடனைத் திரும்ப செலுத்த இயலாமல் தவித்துள்ளார். இதையடுத்து கடன் கொடுத்த கெட்ருபி டாட் காம் நிறுவன ஏஜெண்டுகள், தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்துள்ளனர்.

 ஒரு கட்டத்தில் அவரது செல்போனில் யாரிடம் அதிகமாக பேசுகிறார் என்பதைக் கண்காணித்து அவர்களிடம் கடன் பெற்ற தகவலை தெரிவித்து அசிங்கப்படுத்தி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் மிரட்டலுக்கு பயந்து செல்போனை விவேக் சுவிட்ச் ஆப் செய்து வைத்த நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விவேக் கடன் வாங்கி விட்டுத் தலைமறைவாகி விட்டதாக குறுந்தகவல் சென்றுள்ளது.

 இது தொடர்பாக தகவல் அறிந்த விவேக் அவமானம் தாங்க இயலாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ஆன்லைன் கடன் நிறுவனத்தின் டார்ச்சர் குறித்து விவேக் வேதனையுடன் கூறியதாக தெரிவித்த உறவினர்கள், தற்கொலைக்குத் தூண்டிய சம்பந்தப்பட்ட ஆன்லைன் கடன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 இந்த குற்றச்சாட்டு குறித்து குறுந்தகவல் அனுப்பிய ஆன்லைன் கடன் நிறுவனத்திடம் விசாரித்தபோது, 4 ஆயிரம் ரூபாய்க்கு 300 ரூபாய் வட்டி சேர்த்து, பணத்தை திருப்பி செலுத்தாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால், அவருக்கு தெரிந்தவர்களுக்கு தாங்கள் குறுந்தகவல் அனுப்பியதாகவும், இவ்வாறு செய்ததில் தவறேதும் இல்லை என்பது போல விளக்கம் அளித்தனர்.

 ஆன்லைனில் கடன்பெற நினைப்பவர்கள் தங்களால் கட்ட இயன்றால் மட்டுமே கடன்களைப் பெற வேண்டும், இல்லையேல் என்ன மாதிரியான விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்த்துகிறது இந்த சம்பவம்!

Translate »
error: Content is protected !!