சென்னை,
சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி சென்னை நகரில் 2,614 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய 89 ரவுடிகள் சிறையில் தள்ளப்பட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவான நபர்களை கைது செய்வதில் காவல்துறையினர் முனைப்பு காட்டிவருகின்றனர். சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், நேரடியாக, மறைமுகமாக குழுக்களாக குற்றங்களை செய்து வரும் நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஓராண்டில் இதுவரை 2,614 குற்றவாளிகள் உரிய பிடியாணைகளின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வழிப்பறி, மிரட்டல், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும், ஈடுபட்டு வரும் அதிகமான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 89 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரின் பிரபல ரவுடிகளான கல்வெட்டு ரவி, ராஜா (எ) சீசிங் ராஜா, ராதா (எ) ராதாகிருஷ்ணன், எண்ணுார், தனசேகர், காக்கா தோப்பு பாலாஜி, சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ், நாகேந்திரன், மதுரை செந்தில், கணேசன் (எ) தொப்பை கணேசன் உள்ளிட்ட 89 பேர் கொடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளதாவது, ‘‘பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் மற்றும் புதிதாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களையும் தொடர்ந்து கண்காணித்து குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107, 109, 100 பிரிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அது தவிர நன்னடத்தை பத்திரம் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடாதவண்ணம் 3,705 குற்றவாளிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நன்னடத்தை பிணை பத்திர உறுதிமொழியை மீறிய 120 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் ஜாமினை கோர்ட் மூம் ரத்து செய்யும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 158 குற்றவாளிகளின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 571 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ரவுடிகள், குற்றவாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப் பட்டும், நீதிமன்ற விசாரணை வழக்குகள் தொடர்ச்சியாக தொய்வில்லாமல் விசாரணை நடைபெற்று உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Good Job Commissionar