தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்


கடந்த 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தது. குறிப்பாக 2007, 2011 மற்றும் 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தது. மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரும், இயக்குனருமான எம்.ஜி.எம் மாறன் என்கிற நேசமணிமாறன் முத்து முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை 608 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை செய்ததில் ஃபெமா (FEMA) எனப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கிக்கு 100 கோடி ரூபாயும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு 17 கோடி ரூபாயும் அபராதம் விதித்தது. மேலும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு தனியாக 35 கோடி ரூபாய் அபராதம் அமலாக்கத்துறை மூலம் விதிக்கப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதியானதால், இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டனர்.

மேலும், அபராதத் தொகை செலுத்த தவறினால் அடுத்த கட்டமாக சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கை பாயும் என அமலாக்கத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் அமலாக்கத் துறை நடத்திய தொடர் விசாரணையில் சிங்கப்பூரில் உள்ள இரு பெரு நிறுவனங்களில் எம்.ஜி.எம் மாறன் 5,29,86,250 சிங்கப்பூர் டாலரை முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புடைய 293.91 கோடி ரூபாய் மதிப்புடைய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.ஜி.எம் மாறன் (எ) நேசமணிமாறன் முத்து-வின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேச மணிமாறன் முத்து குறிப்பாக சிங்கப்பூரில் நிறுவனங்களில் 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டில் முதலீடு செய்தது தெரியவந்தது. பிரிவு 37A (1) ன் விதிகள் அடிப்படையில், நேசமணி மாறன் முத்து வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவராக இருந்த போதும் , சிங்கப்பூரில் முறைகேடாக முதலீடு செய்த பணத்திற்கு நிகரான இந்திய சொத்துக்களை முடக்கலாம் என்று சட்டத்தில் உள்ளதால் அதன் அடிப்படையில் சதர்ன் அக்ரிஃபுரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஆனந்த் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், எம்.ஜி.எம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் எம்.ஜி.எம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 இந்திய நிறுவனங்களில் நேசமணி மாறன் முதலீடு செய்திருந்த 293.91 கோடி மதிப்புள்ள பங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Translate »
error: Content is protected !!