கனமழையால் சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் – அரியலூர் விவசாயிகள் வேதனை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் சுமார் 5000 ஆயிரம் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடவு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தொடர் கனமழையால் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நடவு செய்த வயல்களில்  மழைநீர் தேங்கி  தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கின்றது. பொன்னாற்றிலிருந்து வரக்கூடிய இரண்டாம் நம்பர் வாய்க்கால் ரெங்கராஜன் வாய்க்கால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளாக ரெங்கராஜன் வாய்க்காலை தூர் வார மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும், இதனால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்து அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் கோடாலிகருப்பூர் கிராம விவசாயிகள் பொன்னாற்று பாசனம் மூலம் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருவதாகவும், போர்க்கால அடிப்படையில் இரண்டாம் நம்பர் ரெங்கராஜன் வாய்க்காலை முறையாக தூர் வாரி மழை நீர் வடிய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!