சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம்  மோசடி புகார்

சர்கார் பட துணை நடிகர் 82 லட்சம்  மோசடி செய்துவிட்டதாக தயாரிப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை பூர்விகமாக கொண்டு ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தென்னாப் பிரிக்காவில் பணிபுரிந்து வரும் தியாகு ஆகியோர் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோல்ஸ்டன் கருப்பசாமி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து  தயாரித்த குறும்படம் பெருமளவில் வெற்றியடைந்த காரணத்தினால், ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்ததாகவும், அப்போது நண்பர் ஜெயகிருஷ்ணன் மூலமாக சர்கார் உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிய ஆறுபாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

50லட்ச ரூபாய் செலவில் போர்க்குடி என்ற பெயரில் படத்தை இயக்கப்போவதாக ஆறுபாலா கூறியதால், இவரை நம்பி படத்தை தயாரிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் சென்னைக்கு வரமுடியாத காரணத்தினால் old patriotic production பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்க ஆறுபாலாவிடம் கூறியதாகவும், தயாரிப்பு நிறுவனம் பெயரில் வங்கி கணக்கை தொடங்க கூறியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் படத்திற்காக தவணை முறையில் 82லட்சம் ரூபாய் வரை  வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பல மாதங்களாக படத்தை முடிக்காமல் தொடர்ந்து பணம் கேட்டு ஆறுபாலா தொந்தரவு செய்து, வரவு செலவு கணக்கை பார்த்த ராஜபாண்டி என்பவர் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக ஆறுபாலா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்து விசாரித்த போது போலி வரவு செலவு கணக்குகளை ஆறுபாலா தங்களுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை வந்து விசாரித்த போது ராஜபாண்டி, தமிழ்செல்வி, ஆறுபாலா ஆகியோர் இணைந்து படத்தை முடிக்காமல், தங்களது பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரியவந்ததாக கூறியுள்ளார்.

இந்த மோசடி  தொடர்பாக படத்தின் கதாநாயகன் கார்த்திக் கேட்டப்போது, முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், தங்களை வெளிநாடு செல்ல முடியாது என ஆறுபாலா மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.  இது குறித்து கில்டில் புகார் அளித்த போது மோசடி நடந்திருப்பது உறுதி என கூறியதாகவும், இதனால் படம் எடுக்கப்போவதாக 82லட்சம் மோசடி செய்த நடிகர் ஆறுபாலா,ராஜபாண்டி, தமிழ்செல்வி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!