ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் கால அவகாசத்தை 10வது முறையாக மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது. தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ..எஸ்., .பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்பல்லோ நிர்வாகம், ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.

இதன்காரணமாக தற்போது வரை ஆணையத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு பின்பே, ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில் ஆணையத்தின் கால அவகாசம் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 24–ந் தேதி நிறைவடைந்தது.

தொடர்ந்து, ஆணையத்தின் கால அவகாசத்தை 8வது முறையாக மேலும் 4 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதியுடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அவகாசம் முடியும் நிலையில் 9-வது முறையாக மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாணை ஆணையம் அதன் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதைத் தொடர்ந்து இன்றுடன் (25–ந் தேதி) முடிவடைந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிகாலத்தை 10வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!